(பொத்துவில் செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பிரதேசத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாலமுனையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஏ.எல். முஹம்மது றனீஸ் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலமுனை அல்-ஹிதாயா பெண்கள் பாடசாலைக்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலைத் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கணினித் தொகுதியொன்றும் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எம். உவைஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
