மட்டக்களப்பு மாவட்டம், காரமுனை கிராம மக்களின் பூர்வீகக் காணிகளுக்கான காணி உறுதிகள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை விரைவாகப் பெற்றுத் தரக் கோரி விசேட மக்கள் சந்திப்பொன்று காரமுனை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அஜ்மல் தலைமையில் நேற்று (17) இடம்பெற்றது.
நெடுங்காலமாகத் தாங்கள் வாழ்ந்து வரும் பூர்வீகக் காணிகளுக்கான உத்தரவுப் பத்திரங்களோ அல்லது காணி உறுதிகளோ இதுவரை உரிய அதிகாரிகளால் வழங்கப்படாமல், தாம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக மக்கள் இதன்போது கவலை வெளியிட்டனர். அத்துடன் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுத்துத் தமக்கான காணி உரித்துகளைப் பெற்றுத் தருமாறும் அங்கு பிரசன்னமாகியிருந்த அரசியல் பிரதிநிதிகளிடம் மக்கள் அவசர வேண்டுகோள் விடுத்தனர்.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன் இந்நிகழ்வில் அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இக்கலந்துரையாடலில் கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதர், கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் ரிபான், கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்டீன், கோரளைப்பற்று மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பைறூஸ், கோரளைப்பற்றுப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் நுவைல் , கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஹாமிது மௌலவி , காரமுனைப் பிரதேச விவசாய அமைப்பின் தலைவர், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



