(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அம்பாறை மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விபரங்கள் மற்றும் அப்பகுதியில் தொடரும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிரந்தரத் தீர்வு குறித்து நாளை(21) நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பாதுகாப்பு அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை விசேட கேள்வியெழுப்பவுள்ளார்.
நாளைய அமர்வில் அவர் முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 2025ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விபரங்களை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகள் வாரியாக தனித்தனியாக சபையில் சமர்ப்பிக்கக் கோரவுள்ளார்.
தில்லையாறு – சம்புக்களப்பு மற்றும் அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான வடிகால் அமைப்புகளில் காணப்படும் அடைப்புகள் காரணமாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச மக்கள் ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படும் விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளார்.
இந்த வடிகால் அடைப்புகளை முழுமையாக அகற்றி மேற்படி பிரதேச மக்களை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவை என்பது குறித்தும் அவர் சபையில் விளக்கம் கோரவுள்ளார்.
பொதுமக்களைப் பாதிக்கும் இந்த முக்கிய பிரச்சினைக்கு உரிய பதில் அல்லது தீர்வு முன்வைக்கப்படாத பட்சத்தில் அதற்கான காரணங்களையும் அவர் பாதுகாப்பு அமைச்சரிடம் வினவவுள்ளார்.