Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

சுற்றுலா செல்வதை சமூக ஊடகங்களில் பகிர்பவர்களே!உங்களை ஆபத்து தொடர்கிறது அவதானம்

Posted on November 11, 2025 by Admin | 289 Views

விடுமுறை அல்லது புனித யாத்திரை நோக்கில் பயணம் செல்லும் பொதுமக்கள் தங்கள் தற்போதைய இருப்பிடத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் சுயபடங்கள் அல்லது புகைப்படங்களைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு பதிவிடப்படும் தகவல்கள், குடும்பங்கள் வீட்டில் இல்லாததை அறிந்து குற்றவாளிகள் வீடுகளில் கொள்ளை அல்லது சேதம் ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கக்கூடும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எப். யு. வூட்லர் எச்சரித்தார்.

“நாங்கள் நுவரெலியா, காலி அல்லது கதிர்காமத்தில் இருக்கிறோம்” போன்ற தகவல்கள் அல்லது பயணப் புகைப்படங்களைப் பகிர்வது பாதுகாப்பு ரீதியாக ஆபத்தானது. இத்தகைய பதிவுகள் உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் சொத்துகளை கண்காணிக்கும் நபர்களுக்கோ முக்கியமான தகவலாக மாறக்கூடும்,” என அவர் கூறினார்.

மேலும், குறிப்பாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பயணங்களின் போது வாகனங்கள் மற்றும் சாரதிகளைத் தேர்ந்தெடுக்கும் போது சிறப்பு கவனம் தேவை என்றும் அவர் நினைவூட்டினார்.

“நீங்கள் பயணிக்கும் பேருந்து அல்லது வாகனம், அதன் சாரதி மற்றும் உரிமையாளர் ஆகியோரின் விவரங்கள் சரியாகச் சரிபார்க்கப்பட வேண்டும். வாகனம் இயந்திர ரீதியாக நல்ல நிலையில் உள்ளதா, சாரதி பொறுப்பானவரா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்,” என்றார்.

விடுமுறை காலத்தில் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக பொதுமக்கள் இந்த ஆலோசனைகளை பின்பற்றுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.