(அபூ உமர்)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் இருந்து முன்னர் அகற்றப்பட்ட உப பஸ் டிப்போவிற்குப் பதிலாக, புதிய பஸ் டிப்போவை அம்மக்களின் நலனுக்காக மீண்டும் அமைக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
நேற்று (05.06.2025) நடைபெற்ற நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் விமான சேவை அமைச்சின் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர்,
பஸ் டிப்போ அகற்றப்பட்டதால் பொதுமக்கள் பயணத்தில் கடும் அவதியடைந்துவருவதாக தெரிவித்தார். மிக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சம்மாந்துறை உப பஸ் டிப்போ, துரதிருஷ்டவசமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டதாகவும், தற்போது அந்த இடத்தில் புதிய பஸ் டிப்போ ஒன்றை அமைக்கும் நடவடிக்கையை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.