கணினி சார்ந்த குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக 2026.02.06ம் திகதி பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தற்போது நாட்டில் சைபர் குற்றங்கள் கணிசமான அளவில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். நாளொன்றுக்கு சராசரியாக 23 முதல் 25 வரை சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதாகவும், இது கவலைக்கிடமான வளர்ச்சி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வகை குற்றங்களை வினைத்திறனுடன் விசாரித்து தீர்வு காணும் வகையில், நவீன தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் சேவையை திறன் மிகுந்த நவீன மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என வலியுறுத்திய அமைச்சர், அந்த இலக்கை அடைய தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
திறமையான அதிகாரிகள் உயர்மட்ட பதவிகளுக்கு முன்னேறும் சூழலை உருவாக்குவதற்கும் ஒழுக்கக்கேடு செய்பவர்களை சேவையிலிருந்து நீக்குவதற்குமான தெளிவான பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.