2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு இன்று (11) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சை வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல் அல்லது அவற்றை வைத்திருத்தலும் சட்டவிரோதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மீறி செயல்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.