மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமினரையும், தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமினரையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை சர்வதேச செய்தி நிறுவனம் ரொயிட்டர்ஸ் (Reuters) வெளியிட்டுள்ளதுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பணிக்குழாமினரை ஈரான் தனது பரப்புரை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதைத் தவிர்க்கவும் அத்தகைய முயற்சிகளை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை (04) காலி கடற்கரைப் பகுதியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த IRIS Dena எனும் ஈரானிய போர்க்கப்பல் அமெரிக்காவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலொன்றினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் பல பணிக்குழாமினர் உயிரிழந்ததாகவும் உயிர் தப்பிய 32 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட அவர்கள் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன