எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைய உள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் சமீபத்திய எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக விளக்கமளித்தபோது இந்த தகவலை வெளியிட்டார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகும். உலக சந்தையில் நிலவும் விலை உயர்வு காரணமாக இந்த இறக்குமதிகளிலும் அதற்கான தாக்கம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று மார்ச் 25ஆம் திகதி மேலும் 37,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதும் பாரிய நட்டத்துடன் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். நேற்று (21) அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை உயர்வுக்குப் பின்னரும் ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ.100 மற்றும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு ரூ.20 வரை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நட்டத்தை சமநிலைப்படுத்துவதற்காக மாதாந்திரமாக சுமார் ரூ.20 பில்லியன் அரசாங்கம் செலவழித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.