அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் தணியும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தமும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்படிக்கையும் ஈரானில் வெற்றியாகக் கொண்டாடப்படத் தொடங்கியுள்ளது.
ஈரானின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்ட தகவலின்படி, தமது 10 அம்சக் கோரிக்கைகளையும் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றம் ஈரானுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அந்நாட்டு ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இதற்கிடையில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையும் ஒப்பந்தம் தொடர்பாக சாதகமான சிக்னல்களை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலைமைகள் ஈரானின் நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளதாகவும், இது அந்நாட்டு இராஜதந்திர வெற்றியை பிரதிபலிப்பதாகவும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவிக்கும் முன்பே இந்த உடன்படிக்கைக்கு ஈரான் இணக்கம் தெரிவித்திருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.