புதிய வாகனங்களுக்கான தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகள் எதிர்வரும் மே மாத இறுதிக்குள் வழங்கத் தொடங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டபோது இந்த தகவல் வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளரின் பெயரைச் சேர்த்து தனிப்பயன் இலக்கத் தகடுகளை வழங்கும் புதிய முறையையும் விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது.
குழுத் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவிக்கையில், “முன்னர் வாகன இலக்கத் தகடுகளில் மாகாண அடையாள எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது அவை நீக்கப்பட்டுள்ளன,” என்றார்.
இதற்கு பதிலளித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிரியந்த திசாநாயக்க, “யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் எந்தப் பகுதிக்குச் சேர்ந்தவை என்பதை அறிய ‘Frequency ID’ அடையாளத்துடன் இலக்கத் தகடுகள் வழங்கப்பட்டன. எனினும், அவற்றை வாசிக்கும் கருவிகள் அப்போது பொலிஸாரிடம் இல்லாததால், அந்த முறை பின்னர் நீக்கப்பட்டது. தற்போதைய சூழலில் அத்தகைய தேவையும் இல்லை” என்று விளக்கினார்.
மேலும் வாகன உரிமையாளர்களின் பெயரை இலக்கத் தகடுகளில் பதிவு செய்யும் சாத்தியம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அத்தகைய முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். கணினி அமைப்பு மேம்படுத்தப்பட்டவுடன், இந்த விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்” என்றார்.