லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை ரூபா . 25,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூபா. 5 இலட்சம் மதிப்பிலான நான்கு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
லங்கா சதொச நிறுவனத்தின் லொறி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நிதி குற்றப் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணையின் அடிப்படையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் ஜொஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.