Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதில் உதுமாலெப்பை எம்பி முதலிடம் 

Posted on May 3, 2026 by Admin | 196 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்களின் தலைமையில் 2026.04.28ம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட பண்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக்காக பல்வேறு அரசியல் பிரதிநிதிகள் தங்களது நிதிகளை ஒதுக்கியுள்ளனர். அதன்படி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ரூபா 900,000, பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா ரூபா 1,335,000, எம்.எஸ். உதுமாலெப்பை ரூபா 3,300,000, எம்.ஏ.எம். தாஹிர் ரூபா 1,500,000 மற்றும் எம்.எஸ். அப்துல் வாஸித் ரூபா 450,000 ஆகிய தொகைகளை ஒதுக்கியுள்ளனர். மேலும் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படும் ஐந்து அபிவிருத்தித் திட்டங்களில் இரண்டு திட்டங்கள் ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளன. கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அரசின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கும் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், எம்.ஏ.எம்.தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.உவைஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், உதவி பிரதேச செயலாளர் திருமதி. எப்.நஹீஜா முஸாபிர், கணக்காளர் எம்.எப்.பர்ஹான் மற்றும் திணைக்களத் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.