(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
இவ்வருட அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகளை முன்னிட்டு நடத்தப்பட்ட அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியின் எழுத்தாக்க நிகழ்ச்சிகள் இன்று (07) வியாழக்கிழமை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றன.
அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றஸ்மி அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.ஐ. ஹனீபா இஸ்மாயில் அவர்களின் வழிகாட்டுதலிலும் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பிரிவு 2, 3 மற்றும் 4 மாணவர்களை மையப்படுத்தி நடைபெற்ற இப்போட்டியில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் எழுத்தாற்றல், மொழித்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் போட்டிகள் நடத்தப்பட்டன.
நிகழ்விற்கான இடவசதி மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ் மற்றும் உதவி அதிபர் எம்.எச்.எம். றஸாம் ஆகியோர் சிறப்பாக முன்னெடுத்திருந்தனர்.
அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ்த்தினக் குழுவின் செயலாளர் ஆசிரியர் என். பர்ஜூன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த குழு உறுப்பினர்களான ஆசிரியர்கள் கோபிநாத், பி.எம். ஆரிப், ரி. சியாத், ரமீஸ், சீமா, சிபா, ஜிப்ரியா, இர்ஸானா, பஸீனா , நஸூஹா மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் தமிழ் பாட ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.




