நாளை (19) நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு இதுவரை எந்த உத்தியோகபூர்வ அழைப்பும் கிடைக்கவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உபாலி பன்னிலகே வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 5ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என மனோஜ் கமகே கூறினார்.
மேலும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். வழக்கமாக இந்நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்புகள் ஜனாதிபதி செயலகம் அல்லது பாதுகாப்பு அமைச்சு மூலமாக அனுப்பப்படுவது வழக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நாளை (19) பத்தரமுல்லையில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.