இலங்கையில் தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சுமார் 2,500 பேர் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் 45 முதல் 60 குழந்தைகள் வரை கடுமையான தலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிரினி அலஹப்பெரும இந்த தகவல்களை வெளியிட்டார்.
தலசீமியா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் தலசீமியாவுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
தலசீமியா என்பது தொற்றுநோய் அல்ல. இது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு பரவும் மரபணு குறைபாடு கொண்ட நோயாகும். எனவே திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், குருநாகல், அனுராதபுரம், ராகம, மட்டக்களப்பு உள்ளிட்ட அதிக பாதிப்பு காணப்படும் ஆறு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விசேட பரிசோதனை திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை தலசீமியா நோயாளர்களுக்குத் தேவையான குருதி மாற்றீடு மற்றும் மருந்துகள் அனைத்தும் அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.