Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை கடற்கரையில் 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய்

Posted on May 30, 2026 by Admin | 343 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-சாஜித்)

அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிக்கு இன்று (30) மாலை தனது குடும்பத்தினருடன் பொழுதுபோக்கிற்காகச் சென்ற 4 வயது சிறுவனை அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று கொடூரமான முறையில் கடித்துக் குதறியுள்ளது. இதனால் காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

சிறுவன் எந்தவிதமான அச்சுறுத்தலையோ அல்லது சீண்டலையோ செய்யாத நிலையிலும் அந்த நாய் திடீரென பாய்ந்து வந்து சரமாரியாகக் கடித்ததாக அங்கிருந்த நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த நாய்க்கு வெறிநாய்க்கடி நோய்‘ (Rabies) இருக்கலாமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது பாடசாலை விடுமுறைக்காலம் என்பதனாலும், கடுமையான வெப்பமான காலநிலை நிலவுவதனாலும் அட்டாளைச்சேனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் மாலை ,இரவு வேளைகளில் தங்களது பிள்ளைகளுடன் கடற்கரையில் ஒன்று கூடுகின்றனர்.

இவ்வாறான மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொழுதுபோக்கிற்கான இடத்தில் வெறிநாயின் நடமாட்டம் இருப்பது அப்பகுதிக்கு வருகை தரும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாய் மேலும் பல சிறுவர்களையோ அல்லது பெரியவர்களையோ தாக்கக்கூடிய அபாயம் மிக அதிகமாக உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

கடற்கரைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்களது சிறு பிள்ளைகளை ஒருபோதும் தனியாகவோ, தங்களது பார்வையில் இருந்தோ விலகிச் செல்ல அனுமதிக்க வேண்டாம், கடற்கரையில் சுற்றித்திரியும் தெருநாய்களையோ அல்லது வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமாகத் தெரியும் விலங்குகளையோ நெருங்குவதைத் தவிர்க்கவும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இந்த கடற்கரைப் பகுதியில் அச்சுறுத்தலாக விளங்கும் stray dogs (தெருநாய்கள்) மற்றும் வெறிநாய்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார திணைக்களம் மற்றும் அட்டாளைச்சேனை சுகாதார மருத்துவ அதிகாரி(MOH) ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.