(பொத்துவில் செய்தியாளர் -முஸால்)
அரசாங்கத்தின் தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டமான “ஆயிரம் கிராமம் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” எனும் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் நேற்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 27 கிராம நிலதாரி பிரிவுகளின் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கிராம மட்ட மக்களின் வருமானத்தை அதிகரித்தல், நிலையான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 27 கிராம நிலதாரி பிரிவுகளுக்காக மொத்தம் ரூபாய் 46 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 27 வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக ரூபாய் 9.6 மில்லியன் செலவில் மூன்று முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டங்கள் ஊடாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, கிராம மட்டத்தில் தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், இத்திட்டங்கள் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு நேரடியாக பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், அரச அதிகாரிகள், பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

