சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு அநுராபுரம் விசேட மேல் நீதிமன்றம் 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
வறுமை காரணமாகச் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள விகாரையொன்றில் ஒப்படைக்கப்பட்ட 10 வயதுச் சிறுவனை, அந்த விகாரையின் விகாராதிபதி மிகக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளியான பிக்குவுக்குச் சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது. எனினும் தீர்ப்பு வழங்கப்படும் போது குறித்த பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தலைமறைவாகியிருந்ததால் அவர் இல்லாத நிலையிலேயே வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தப்பியோடியுள்ள அந்தப் பிக்குவைக் உடனடியாகக் கைது செய்யுமாறு நீதிமன்றம் தற்போது பிடியாணை பிறப்பித்துள்ளது.