Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஒரு லீட்டர் டீசல் விலை 720ரூபாவா? ஜூன் மாதத்துடன் மானியத்தை நிறுத்துகிறது அரசு!

Posted on June 13, 2026 by Admin | 125 Views

எரிபொருளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் மானியங்கள் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

பொது நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அதிகாரிகள் இந்த விபரத்தை வெளியிட்டனர். எனினும், மானியம் நீக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை என்றும் அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்புக்கு மத்தியில், நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் உண்மையான விலை 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்சமயம் அரசாங்கத்தினால் ஒரு லீட்டர் டீசலுக்காக 100 ரூபாய் மானியம் செலவிடப்பட்டு, 392 ரூபாய் என்ற விலைக்கு மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இதன் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இத்தகைய மானிய நடைமுறையை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.