(அட்டாளைச்சேனை செய்தியாளர் )
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் சிரேஷ்ட கல்வி அதிகாரி ஏ.எச். பௌஸ் (SLEAS) கல்வி நிர்வாக சேவை தரம் – 01 பதவிக்கு உத்தியோகபூர்வமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
இதற்கான முறையான நியமனக் கடிதத்தை கல்வி அமைச்சு இன்று வழங்கியுள்ளதுடன் இந்த தரமுயர்த்தலானது கடந்த 2025 ஜனவரி 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் பொது ஆளணி (General Cadre) போட்டிப் பரீட்சை மூலம் இச்சேவைக்குள் உள்வாங்கப்பட்ட ஏ.எச். பௌஸ் கல்வித்துறையில் ஆழ்ந்த புலமைப் பின்னணியைக் கொண்டவராவார்.
இவர் கல்வித்துறையிலான இளமாணி (BEd) மற்றும் முதுமாணி (MEd) பட்டங்களைப் பெற்று கல்வி நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார்.
ஆசிரியராகத் தனது முதற்கட்ட கல்விப் பணியை ஆரம்பித்த அவர், பின்னர் அதிபராகவும், வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்துள்ளார். இதன் மூலம் பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அவர் ஆற்றியுள்ள அர்ப்பணிப்புமிக்க சேவை அளப்பரியதாகும்.
கல்வி நிர்வாக சேவையின் மிக உயரிய தரத்திற்கு (SLEAS 1) தரம் உயர்த்தப்பட்டுள்ள பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.