(கல்முனை செய்தியாளர்)
2025(2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் பாரிய சாதனை படைத்துள்ளது.
வலய வாரியாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின்படி கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இம்முறை கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5 சதவீத சித்தி வீதத்தைப் பெற்று மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் தனதாக்கியுள்ளது. அத்துடன், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பிரதான பாடங்களுடன் சேர்த்து 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1 சதவீதமாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை கல்வி வலயத்தின் இந்த அபார வெற்றிக்கு வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட விசேட கல்விப் பயிற்சிகள் மற்றும் திட்டமிடல்களே இதற்கு முக்கிய காரணமாகும் அத்துடன் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைந்த கூட்டு அர்ப்பணிப்பே கல்முனை மண்ணுக்கு இந்த பெருமையைத் தேடித்தந்துள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனை ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.