தீவிரமாகப் பரவி வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகத்தின் வழிகாட்டலில் மூன்று நாட்கள் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு கூட்டு நடவடிக்கை ஒன்று ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இணையாகச் செயல்படுத்தப்படும் இந்த விசேட கூட்டு நடவடிக்கை குறித்த ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பேசிய ஜனாதிபதி செயலாளர், தற்போதைய மழைக்கால நிலைமை காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு பரவல் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காகக் குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் கொண்ட முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அவர், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பொதுமக்களின் விழிப்புணர்வும் பங்களிப்பும் இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.
வீட்டு வளாகங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களைச் சூழவும் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதில் அனைத்துத் தரப்பினரும் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பேசிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, டெங்கு பரவலின் தற்போதைய நிலவரம், அதன் அபாய நிலை மற்றும் அதனைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மக்களை விழிப்புணர்வூட்டுவதும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க அவர்களைத் தூண்டுவதுமே இந்த நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான படியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி செயலாளர், இந்த உன்னத நோக்கத்திற்காக நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.