(அட்டாளைச்சேனை செய்தியாளர்-எம்.ஜே.எம்.சஜீத்)
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த. (உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட புதிய ஆசிரிய பயிலுநர்களை வரவேற்று இணைத்துக்கொள்ளும் நிகழ்வு கல்லூரியின் பீடாதிபதி எம்.சி. ஜுனைட் தலைமையில் இன்று (25) கல்லூரி வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
நடைபெற்ற இந்த வரவேற்பு விழாவில் இரண்டாம் வருட ஆசிரிய பயிலுநர்கள் புதியதாக வருகை தந்த மாணவர்களை இன்முகத்தோடு வரவேற்று கல்லூரிச் சமூகத்துடன் இணைத்துக்கொண்டனர்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பின் கீழ் அட்டாளைச்சேனை வளாகத்திற்கு ஆரம்பக் கல்வி, விஞ்ஞானம், கணிதம், இஸ்லாம், விசேட கல்வி, முயற்சியான்மை கல்வி மற்றும் நிதி அறிவியல், இஸ்லாம் (சிங்கள மொழி) மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடநெறிகளுக்காக மொத்தம் 420 ஆசிரிய பயிலுநர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் 256 புதிய ஆசிரிய பயிலுநர்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுதித் தங்குமிட வசதிகளும் தங்குதடையின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கல்வித்துறையின் முக்கிய மைல்கல்லாக அமைந்த இந்நிழவில் நிதி மற்றும் நிர்வாகத்திற்கான உப பீடாதிபதி எம்.டி. முஸம்மில், கல்விக்கான உப பீடாதிபதி ஏ.ஜி. அஹமட் நழீர், தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி ஏ.எஸ்.எம். சதாத் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், நிர்வாகத்திற்கான இணைப்பாளர் ஏ.எம். நியாஸ், கல்விக்கான இணைப்பாளர் எம்.சீ.எம். ஜெஸீம், கல்லூரியின் பதிவாளர் எச்.எம்.ஏ. ஹசன், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் எம்.எச்.ஏ. சதாத் ஆகியோருடன் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய பயிலுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


