(அக்கரைப்பற்று செய்தியாளர் -ராஜி)
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 80ஆம் ஆண்டு நிறைவு(அமுத விழா) விழாவையொட்டி கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில் (2021, 2022, 2023, 2024) பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட விழா நேற்று வெள்ளிக்கிழமை (03)வகல்லூரி வளாகத்தில் பழைய மாணவர் சங்கத்தின் பிரத்தியேக ஏற்பாட்டில் அதிபர் திருமதி ஏ.எல். நசீபா (SLPS) தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இப்பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சியில் நீண்டகாலமாக அரிய பல பங்களிப்புகளை வழங்கிவரும் இக்கல்லூரி தனது எண்பதாண்டு காலப் பயணத்தில் ஒரே மேடையில் இத்தனை சாதனையாளர்களை ஒன்றிணைத்துக் கௌரவித்தமை கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பொறியியல்) பொறியியலாளர் ஏ.கே. அப்துல் ஜப்பார். விஷேட அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம். யாசீர் அரபாத் மொஹிதீன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்சார் ஆகியோர் சாதனையாளர்களை வாழ்த்தி மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்களையும் கௌரவங்களையும் வழங்கி வைத்தனர்.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் (PPA), பாடசாலை முகாமைத்துவக் குழு (SMT) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பேராதரவோடு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாராட்டு விழா மிக நேர்த்தியாகக் கொண்டாடி மகிழப்பட்டது.





