(மருதமுனை செய்தியாளர் கியாஸ்)
மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ் வண்டி மோதிய வேகத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர், திருமணத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு பிரதேசத்தில் வசித்து வந்தவராவார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.