(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலும், மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலும் புகையிரதப் பாதையை விஸ்தரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை சமர்ப்பித்துள்ள விசேட தனிநபர் பிரேரணை நாளை வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தப் புகையிரதப் பாதை விஸ்தரிப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் போக்குவரத்து ரீதியாகப் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலான ரயில் போக்குவரத்துச் சேவை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலான அதிவேக நெடுஞ்சாலை பாதை அல்லது கதிர்காமத்திலிருந்து கல்முனை வரையிலான ரயில் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது இம்மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை வெள்ளிக்கிழமை(24) இடம்பெறவுள்ள இந்த முக்கிய விவாதத்தின் மூலம் கிழக்கு மற்றும் ஊவா மாகாண மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குக் காத்திரமான தீர்வொன்று கிட்டுமெனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.