(அட்டாளைச்சேனை செய்தியாளர் )
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையினால் சபையில் முன்வைக்கப்பட்ட மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையிலான ரயில் பாதை தொடர்பான முக்கிய தனிநபர் பிரேரணை வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறவிருக்கின்ற நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் குறித்த தனிநபர் பிரேரணையை இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதில்லை எனவும், அதனைப் பிறிதொரு பாராளுமன்ற அமர்வில் கலந்துரையாடுவதெனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்து அபிவிருத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு – பொத்துவில் ரயில் பாதை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையினால் கொண்டுவரப்பட்ட இந்தத் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் புதிய திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.