Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted on August 4, 2026 by Admin | 1093 Views

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து அரச சேவையில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கு பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள் இன்று (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைவாக இவ்வாணைக்குழு நிறுவப்பட்டதுடன் அதற்கான அறிவித்தல் 2026 ஜூன் 22ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.

ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அசோக்க பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் செயற்படும் இந்த ஆணைக்குழுவில் மொத்தம் 15 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய சிக்கல்களுக்கு தீர்வுகளை முன்வைத்தல், அரச சேவையின் தொழில்முறைத் திறனை மேம்படுத்தல், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் உலகளாவிய மாற்றங்களுக்கும் ஏற்ப அரச சேவையை கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் ஆகிய பொறுப்புகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சந்தன அபேரத்ன, அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளை ஆராய்வதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான ஆணைக்குழு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென தனிப்பட்ட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது நாட்டின் வரலாற்றில் முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்தியில் அரசு ஊழியர்கள் முக்கிய பங்காற்றுவதால், அரச சேவையை வலுப்படுத்துவது அவசியமானது என்றும், அதற்காக நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தபோதிலும், அவற்றுக்கு அறிவியல் அடிப்படையிலான தீர்வுத் திட்டங்கள் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.