(கல்முனை செய்தியாளர்)
பொலன்னறுவை, பகமூண – தம்புள்ளை பிரதான வீதியின் தமனயாய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்ததுடன் ஒன்றரை வயதுக் குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.
கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
விபத்தில் பகமூண, தமனயாய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 43 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒன்றரை வயதுடைய குழந்தை படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று (11) அதிகாலை 1.25 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதியை நோக்கித் திரும்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த பேருந்து மோட்டார் சைக்கிளுடன் பலமாக மோதியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியை பகமூண பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பகமூண பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.