Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted on July 7, 2025 by Admin | 257 Views

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில், தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் அரசாங்கம் மற்றும் அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உரிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என முன்வைத்த கோரிக்கையைச் சந்திக்கும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

“மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். ஆகவே, தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மிகுந்த பேச்சுவார்த்தைகளுக்கு தயார்” என அவர் கூறினார்.

அமைச்சரவை மட்டத்தில் தற்போது தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை, மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஆகியவற்றும் தற்போது அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த மாதங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளுக்கும் சிறப்பான முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், அந்த தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

மாகாண சபை முறைமையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக, எந்தவொரு குறுகிய அரசியல் நோக்கங்களிலும் இன்றி, வெளிப்படைத்தன்மை மற்றும் கலந்துரையாடலுடன் தீர்வுகள் தேடப்படும் எனவும் அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதிமொழி வழங்கினார்