Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அமைச்சரவை மாற்றம் குறித்த தீர்மானத்தில் பதட்டம்: ஆளும் கூட்டணியில் கருத்து முரண்பாடுகள் தீவிரம்

Posted on June 1, 2025 by Admin | 279 Views

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து துரிதமாக அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் ஆராய்ந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட உள்வீட்டு முரண்பாடுகள் அதனை நிறைவேற்ற எளிதல்ல என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கூட்டணியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறார். மாற்றங்கள் எதிரொலிக்கும் சூழலில், பரந்த அமைப்பில் ஒத்துழைப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பயனளிக்காது என்றதாலேயே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, அமைச்சரவை செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியிருந்தாலும், தற்போதைக்கு அமைச்சரவை மாற்றம் குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் பதவியிலும் மாற்றம் ஏற்படும் எனக் கூறும் தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவியிருந்தன. இதுதொடர்பாக, ஜே.வி.பி.வுக்குள் விஜித ஹேராத்தை பிரதமராக்குவது, ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், பிரதமர் பதவியில் மாற்றம் தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாக அரசாங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுமாயின், 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயல்படத் தயார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமைக்கு தீர்வாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியுடனும் தேசிய மக்கள் சக்தியுடனும் நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, கொள்கை ரீதியாக ஏற்பட்டுள்ள இணக்கப்பாடின்மையை சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.