(அபூ உமர்)
மட்டக்களப்பு புகையிரத ஆசனப் பதிவினை கல்முணையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து விமானத்துறை அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் நேற்று(05.06.2025) உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தினூடாக பிரயாணம் மேற்கொள்கின்ற அம்பாறை மாவட்ட பயணிகள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு ஒரு தினத்திற்கு முன்னர் சென்றுதான் ஆசனப் பதிவினை மேற்கொள்ள வேண்டிய நிலை தற்போது காணப்படுகிறது. பொத்துவிலிலுள்ள ஒரு நபர் ஆசனப் பதிவினை மேற்கொள்வதாக இருந்தால் பல ரூபாய் பணங்களையும், பல நாட்களையும் செலவளிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. சில காலங்களுக்கு முன்பு மட்டக்களப்பு புகையிரதத்தினூடாக பிரயாணம் செய்வதாக இருந்தால் அதற்கான ஆசனப் பதிவினை அம்பாறை மாவட்ட மக்கள் கல்முணையில் மேற்கொண்டிருந்தனர். ஆனால் அந்த நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சரும் , உயரதிகாரிகளும் இணைந்து மீண்டும் அம்பாறை மாவட்ட பிரயாணிகள் மட்டக்களப்பு புகையிரத ஆசனப் பதிவினை கல்முணையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.