இலங்கை கடல் எல்லைக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்றை அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இந்தக் கப்பல் இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
‘மெரீன் ட்ராஃபிக்’ தரவுகளின்படி குறித்த கப்பல் சுமார் 300,000 தொன் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் கப்பலாகும்.அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் இந்தக் கப்பலுக்கு தடைகள் விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பல் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அத்துடன் ஏப்ரல் 10 ஆம் திகதி வளைகுடா பிராந்தியத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கையின் காலி துறைமுகத்திற்கு அருகில் குறுகிய நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.