Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் அதிபர், உப அதிபர் அதிரடியாக கைது

Posted on June 20, 2026 by Admin | 271 Views

அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி குறித்த பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது, அங்கு வந்திருந்த வெளிப்பாடசாலையைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் ஒருவன் அதே வயதுடைய இப்பாடசாலை மாணவியை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபரீதம் குறித்து பாடசாலை நிர்வாகத்திற்குத் தெரிந்திருந்தும், அதிபரும் உப அதிபரும் அதனை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனினும், இச்சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு (NCPA) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர்களது உத்தரவின் பேரில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அமில ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நடத்திய தீவிர விசாரணைகளை அடுத்து, குற்றச்சாட்டிற்கு உள்ளான 15 வயது மாணவன், சம்பவத்தை மறைக்க முயன்ற பாடசாலை அதிபர் மற்றும் உப அதிபர் ஆகிய மூவரும் நேற்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், அம்பலாந்தோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலை வளாகத்திற்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிர்வாகத்தினரே இத்தகைய கொடூர சம்பவத்தை மறைக்க முயன்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.