கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழு பிரதி காவல்துறைமா அதிபர் தலைமையிலான முழு அதிகாரம்கொண்ட பொலிஸ் பிரிவை அமைப்பதற்கு அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்திற்கு கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி எடுக்கப்பட்ட இந்த அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு அல்லது இடைநிறுத்துமாறு கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ‘இலங்கை நீதிக்கான மய்யம்’ அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடலோர அத்துமீறல்களைத் தடுப்பதாகக் கூறி கொண்டுவரப்பட்டுள்ள இந்த விசேட பொறிமுறையானது சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கை என அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
காணி ஆக்கிரமிப்புகளும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியவை அல்ல என்றும், அவை தெற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் காணப்படும் தேசியப் பிரச்சினைகள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தை மட்டும் தனியாகப் பிரித்து இத்தகைய விசேட குழுவை அமைப்பது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகள் இன, மத, பிராந்திய பாகுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற நிலையில், இந்த ஒருதலைப்பட்சமான மாகாண பொறிமுறையானது அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரச காணிகள் (பொறுப்பேற்பு மீட்பு) சட்டம், அரச காணிகள் சட்டம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் என ஏற்கனவே நாட்டில் போதுமான சட்டக் கட்டமைப்புகள் நடைமுறையில் உள்ளன. மகாவலி அதிகார சபை உள்ளிட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகளை தற்போதுள்ள சட்டங்களைக் கொண்டே பிரதேச செயலாளர்கள் மற்றும் காவல்துறை ஊடாகத் தீர்க்க முடியும் என விபரித்துள்ள அந்த அமைப்பு, அவ்வாறிருக்கையில் புதிய குழுக்கள் எதற்காக என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
தற்போது நாட்டுக்குத் தேவைப்படுவது புதிய விசேட குழுக்கள் அல்ல; மாறாக, அமுலில் இருக்கும் சட்டங்களை ஒன்பது மாகாணங்களுக்கும் பாரபட்சமின்றி, சமமாக அமுல்படுத்துவதற்கான உண்மையான “அரசியல் விருப்பமே” (Political will) ஆகும் என இலங்கை நீதிக்கான மய்யம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, தேவையற்ற இனமுறுகல்களையும் சந்தேகங்களையும் தோற்றுவிக்கக்கூடிய இந்த சர்ச்சைக்குரிய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இது குறித்து வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொதுமக்கள் ஆலோசனைகளை நடத்தி சட்டத்தை நாடு முழுவதும் சமத்துவத்தின் அடிப்படையில் அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

