(அட்டாளைச்சேனை செய்தியாளர்-எம்.ஜே.எம்.சஜீத்)
இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான புதிய வலய இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலய (தேசிய பாடசாலை) வளாகத்தில் நேற்று (29) நடைபெற்ற கல்விசாரா உத்தியோகத்தர்களின் விசேட கூட்டத்தின் போதே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான புதிய இணைப்பாளர்களாக எம்.எம். பௌசான் மற்றும் ஏ.எல்.எம். அஷ்ரப் ஆகியோர் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை சங்கத்தின் உப செயலாளர் ஏ.எம். ஜெமில் நிகழ்வின் போது வழங்கி வைத்தார்.
இந்த முக்கிய அமர்வில் அம்பாறை மாவட்ட இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் செயலாளர் எம்.ஜே.எம். சஜீத் மற்றும் சம்மாந்துறை கல்வி வலயத்தைச் சேர்ந்த பெருமளவிலான கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது, கல்விசாரா உத்தியோகத்தர்களின் உரிமைகள் மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அமைப்பின் பிராந்தியக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

