நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை முன்வைத்து தமக்கு எதிராக எழுந்துள்ள அழுத்தங்களுக்குப் பணிந்து, தமது பதவியை ஒருபோதும் இராஜினாமா செய்யப்போவதில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் மட்டுமே தம்மைப் பதவியிலிருந்து நீக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை மோதல் சம்பவத்தை அடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகளும் அழுத்தங்களும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இதனைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே தாம் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பாகக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அதிகாரிகள் தற்போது எவ்விதத் தலையீடுகளுமின்றி மிகவும் சுதந்திரமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த மோதலின் போது காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கைதிகள் அளித்துள்ள வாக்குமூலங்கள், ஒட்டுமொத்த விசாரணைப் போக்கையும் வெற்றிகரமாக்குவதற்கும், உண்மைத் தகவல்களை வெளிக்கொணர்வதற்கும் மிக முக்கிய சான்றுகளாக அமையும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.