Top News
| அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் மரணப் பொறியாக மாறியுள்ள வடிகான்- கண்டும் காணாமல் இருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை | | பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு |
Aug 16, 2026

டெங்கு ஒழிப்பில் மாணவர்களின் பங்கு – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் புதிய நடவடிக்கை

Posted on July 21, 2026 by Admin | 108 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-ஹபீஸ்)

நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் சமீப காலமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட நிகழ்வு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

எதிர்காலச் சந்ததியினரான மாணவர்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும், அவர்களை டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் வகையிலும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். அஜ்மீர் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

தற்போதைய பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அபாயகரமான கட்டத்தை எட்டி மரணங்கள் நிகழும் இச்சூழலில் வளவாளராகக் கலந்துகொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) ஏ.எச். பௌமி, மாணவர்களுக்கு தெளிவூட்டும் சிறப்புரையை நிகழ்த்தினார்.

டெங்கு நோயைப் பரப்பும் ‘ஏடிஸ்’ (Aedes) வகை நுளம்புகளின் உற்பத்தியாகும் இடங்கள், அவற்றின் இனப்பெருக்க முறைமை, நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவாக விளக்கமளித்தார்.

குறிப்பாக பாடசாலைச் சூழலிலும் வீடுகளிலும் மழைநீர் தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், யோகட் கோப்பைகள் மற்றும் நீர்வரத்து வடிகான்களைச் சுத்தமாகப் பேணுவதன் அவசியத்தை அவர் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

டெங்கு காய்ச்சல் ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டினாலும், அது எவ்வித முன்னறிவிப்புமின்றி உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோயாகும். நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமும், சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாகப் பேணுவதன் மூலமும் மாத்திரமே நாம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும்,” என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், எளிய சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், மாணவர்கள் தங்களது வீடுகளிலும், அயலிலும் ‘டெங்கு ஒழிப்புத் தூதுவர்களாக’ (Dengue Prevention Ambassadors) செயற்பட்டு சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் விழிப்புணர்வு தேவைப்படும் இக்காலகட்டத்தில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட காலத்திற்குப் பொருத்தமான இந்நிகழ்ச்சியானது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.