(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்துத் துறையில் பாரிய திருப்புமுனையாக அமையவுள்ள மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான புதிய ரயில் பாதை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையினால் சபையில் முன்வைக்கப்பட்ட முக்கிய தனிநபர் பிரேரணை நாளை (07) வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த பாராளுமன்ற அமர்வின்போதே கிழக்கு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான இந்த ரயில் பாதை விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், அன்றையதினம் நிதியமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதங்கள் இடம்பெற்றதன் காரணமாக, குறித்த தனிநபர் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் பிரிதொரு அமர்விற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, மட்டக்களப்பு – பொத்துவில் ரயில் பாதை நிர்மாணத்தின் அவசியத்தை வலியுறுத்தும் எம்.பி உதுமாலெப்பையின் குறித்த விசேட தனிநபர் பிரேரணை நாளையதினம் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக விவாதத்திற்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.