ஈரான் தனது தாக்குதல் கொள்கையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளதாக தெஹ்ரானில் செயல்படும் காதம் அல்-அன்பியா இராணுவ தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இதுவரை பின்பற்றப்பட்ட “பரஸ்பர தாக்குதல்” கொள்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனிமேல் “தாக்குதலுக்குத் தாக்குதல்” என்ற புதிய இராணுவ அணுகுமுறையை ஈரான் கடைப்பிடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டணி நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாகச் செல்ல ஈரான் அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்தார். அந்த நாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு கப்பல் அல்லது எண்ணெய் தாங்கியும் ஈரானின் தாக்குதலுக்கான இலக்காக மாறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் உலக சந்தையில் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 200 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என்றும் அவர் கூறினார். எண்ணெய் விலை பிராந்திய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்றும், அந்த பாதுகாப்பை பாதித்தது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் தான் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.