சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா அமெரிக்க இராணுவத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டின் அரை-அரசு செய்தி நிறுவனம் ‘மெஹர்’ இன்று (21) தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிடுகையில் “இது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். ஈரானிய ஏவுகணைகளின் தாக்கு வட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதை இது வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தளம் அமெரிக்காவின் முக்கியமான கடற்படை மற்றும் விமானப்படை தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனை நோக்கி இரண்டு நடுத்தர தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அந்தத் தாக்குதலால் தளத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) என்ற போர்க்கப்பலுக்கு எதிராக டார்பிடோ தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பல் டியாகோ கார்சியா தீவிலிருந்தே செயல்பட்டதாக முன்பாக தகவல்கள் வெளியாகியிருந்தன.