நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேல் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவிற்கு மிதமான மழைவீழ்ச்சி ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் வாய்ப்பு காணப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சூரியன் வடதிசை நோக்கி நகரும் தோற்ற இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்ச நிலையை அடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12.13 மணியளவில் ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, கலமட்டிய மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்கு மேல் சூரியன் நேர்கோட்டில் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.