Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உலகை அதிரவைக்கும் ஈரானின் முடிவு

Posted on April 6, 2026 by Admin | 383 Views

ஈரானின் போர் சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்ட பின்னரே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் தொடர்பாடல் பிரதிப் பணிப்பாளர் செய்யிட் மெஹ்தி தபதபாயி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு சரியான நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச போக்குவரத்து கட்டணங்களின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ள புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் இந்த நட்டஈடு வழங்கப்பட்ட பின்னரே ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரானின் முக்கிய சிவில் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த தபதபாயி, ட்ரம்பின் கருத்துக்கள் விரக்தி மற்றும் ஆத்திரத்தின் வெளிப்பாடாகும் என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தரமற்ற மற்றும் பொருள் இல்லாத கருத்துக்களை முன்வைப்பதாகவும் அவர் தனது சமூக வலைத்தள பதிவில் சாடியுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் அதனைத் திறப்பதற்கான நட்டஈடு கோரிக்கை ஆகியவை சர்வதேச மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.