Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

இஸ்ரேலுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு லெபனானில் எதிர்ப்பு

Posted on April 12, 2026 by Admin | 279 Views

இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க லெபனான் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு அந்த நாட்டுக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலைமை அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையை முன்னிட்டு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த லெபனான் பிரதமர் நவாப் சலாம் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைக்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் நிலவுகின்ற நிலையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று லெபனானின் மூத்த ஷியா அரசியல் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் நபீ பெர்ரி வலியுறுத்தியுள்ளார். முதலில் முழுமையான போர்நிறுத்தம் அமுலுக்கு வர வேண்டும். அதன் பின்னரே எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பெய்ரூட்டில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழலில் வீதிப்போராட்டங்களைத் தவிர்க்குமாறு ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டணி அமைப்பான அமல் இயக்கம் ஆகியவை தமது ஆதரவாளர்களை அறிவுறுத்தியுள்ளன. உள்நாட்டுக் குழப்பத்தை இஸ்ரேல் தனது நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற அச்சமே இந்த எச்சரிக்கைக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்தாலும் லெபனானின் தற்போதைய உள்நாட்டு பதற்றம் அந்த முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.