அமெரிக்கா மீண்டும் தாக்குதல் மேற்கொண்டால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி உடனடி பதிலடி வழங்கத் தயாராக உள்ளதாக ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பை ஈரானின் காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் ஸோல்பகாரி வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டு இராணுவத் தலைமைத்துவம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் ஈரானின் இந்த நிலைப்பாடு சர்வதேச அரங்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து இப்ராஹிம் ஸோல்பகாரி தெரிவித்ததாவது: “எங்கள் படைகள் நீண்ட காலமாக முழுமையான தயார்நிலையில் உள்ளன. நாங்கள் எப்போதும் துப்பாக்கி விசையிலேயே கை வைத்துள்ளோம். ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக எந்தவிதமான தாக்குதலும் நடத்தப்பட்டால் அதற்கு உடனடியும் வலுவானதுமான பதிலடி வழங்கப்படும்” என்றார்.
இதேவேளை பாகிஸ்தான் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா தற்காலிக போர்நிறுத்தத்தை நீடித்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. எனினும் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான கடற்படை முற்றுகை தொடரும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் இராணுவத்தின் இந்த கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளதாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழல், பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து பெரிய அளவிலான மோதலுக்கான அச்சத்தை உருவாக்கியுள்ளது.