(அட்டாளைச்சேனை செய்தியாளர்- அஹமட்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார செயற்பாடுகளை மக்கள் மயப்படுத்தி இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கட்சியுடன் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அட்டாளைச்சேனை மத்திய குழுவுடன் ஆலோசனை கூட்டம் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் பங்கேற்புடன் அட்டாளைச்சேனை மத்திய குழுத் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உப தவிசாளருமான ஜெளபர் PRO தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், வட்டார மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இளைஞர்கள், யுவதிகளை கட்சியின் சமூக நல செயற்பாடுகளுடன் இணைக்கும் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களை துரிதமாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. அத்துடன், பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக நலத் திட்டங்களை மத்திய குழுவின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சியின் பிரதேச மற்றும் வட்டார முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
