ஊழல் குற்றச்சாட்டில் வழக்கை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (18) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.
இதன்போது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்து தனது மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவரது தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பினரின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்த உத்தரவிட்டது.
சாமர சம்பத் தசநாயக்க 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மாகாண சபைக்காக வழங்கப்பட்ட காசோலையை தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் வைப்பு செய்ததாகக் கூறி அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.