Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

உதுமாலெப்பை எம்பியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Posted on May 27, 2026 by Admin | 72 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

மனங்களால்‌ கரம்‌ கோர்ப்போம்‌..

இஸ்லாம்‌ என்பது மதம்‌ அல்ல.
அது ஒரு மார்க்கம்‌.. அது வாழ்வதற்கான வழி.. அது தியாகத்தின்‌ வழியே பிறந்தது.. இறைவன்‌ எதை விதித்தானோ எவற்றையெல்லாம்‌ ஏவி உள்ளானோ அதன்படி எமது வாழ்வியலை நடைமுறை ரீதியாக முன்‌ கொண்டு செல்ல வேண்டியது முஸ்லிம்களாகிய நமது கடமையாகும்‌. அதன்‌ அடிப்படையில்தான்‌ இப்ராஹீம்‌ அலைஹிஸ்ஸலாம்‌ அவர்களின்‌ தியாகத்தை இவ்வுலகிற்கு வலியுறுத்திச்‌ சொல்லுகின்ற தினமாக ஹஜ்‌ பெருநாள்‌ தினத்தை முஸ்லிம்களாகிய நாம்‌ அனைவரும்‌ மகிழ்ச்சியாக நினைவுப்படுத்தி கொண்டாடுகிறோம்‌.

இப்ராஹீம்‌ அலைஹிஸ்ஸலாம்‌ அவர்கள்‌ தனி மனிதனாக அன்றி ஓர் உம்மத்தாக (சமூகம்‌) செயல்பட்டு தனது குடும்பத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி இறை கட்டளைக்கு அடிபணியக்கூடியதாக மாற்றியதால்‌தான்‌ அல்லாஹ்வின்‌ நண்பர்‌ (ஹலீலுல்லாஹ்‌) என்ற சிறப்பை பெற்றார்‌. அத்தகைய உன்னத நபியின்‌ வழித்தோன்றல்களான நாமும்‌ நமது வாழ்வில்‌ விட்டுக்‌ கொடுப்போடும்‌ தியாக உணர்வோடும்‌ செயல்படும்‌ போதுதான்‌ இறைதிருப்தியையும்‌ அடைந்து கொள்ளக்‌ கூடியதாக இருக்கும்‌. இப்புனித தினத்தில்‌ “நீங்கள்‌ அறுக்கின்ற பிராணியின்‌ இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை. எனினும்‌ இறையுணர்வே சென்றடைகிறது”. என்ற இறை வசனத்திற்கிணங்க வசதி கொண்டவர்கள்‌ இல்லாத எளியவர்களுக்கு வாரி வழங்குவதன்‌ மூலம்‌ இறைவனது அன்புக்குரியவர்களாகலாம்‌ என்ற உன்னத நோக்கின்‌ அடிப்படையில்‌ உழ்ஹிய்யா என்கின்ற பெரும்‌ அமலை இத்தருணத்தில்‌ நாம்‌ மேற்கொள்கிறோம்‌.

நாம்‌ இன்றைய பெருநாள்‌ தினத்தில்‌ புத்தாடை அணிந்து மகிழ்ந்திருக்கும்‌ இச்சந்தர்ப்பத்தில்‌தான்‌ நமது இரத்த உறவுகள்‌ பலஸ்தீன்‌ மண்ணிலும்‌ ஈரானிலும்‌ துயர்‌ கொண்ட பெருநாளை கொண்டாடுகிறார்கள்‌. இஸ்லாத்திற்கு எதிரான சியோனிச சக்திகளால்‌ மிகக்‌ கவனமாக முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சிகளில்‌ இருந்து நமது சமூகம்‌ விடுதலை பெறவும்‌ இன்றைய நன்னாளில்‌ நமது பிரார்த்தனைகளில்‌ அவர்களையும்‌ இணைத்துக்‌ கொள்வது நமது கடமையாகிறது.

எல்லாம்‌ வல்ல இறைவன்‌ நமது அத்தனை நல்ல செயல்களையும்‌ பொருந்தி கொள்ள வேண்டி உறவுகள்‌ அனைவருக்கும்‌ ஈகைத்திருநாள்‌ நல்வாழ்த்துக்கள்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

ஈத்‌ முபாரக்‌….

எம்‌. எஸ்‌. உதுமாலெப்பை (பா.உ)
திகாமடுல்ல மாவட்டம்‌
தேசியப்‌ பிரதி அமைப்பாளர்‌,
ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸ்‌.