தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடத்தை ஸ்தாபித்து தருமாறு திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது அவர் பிரதமரடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த வாரப் பிற்பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இக் கோரிக்கையை விடுத்தார்.
அக்கரைப்பற்று, கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு, சம்மாந்துறை, நிந்தவூர் வைத்தியசாலைகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ளன.
நிந்தவூரில் ஏற்கனவே ஒரு பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு இடைநடுவில் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள 07 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பலமாடி கொண்ட மருத்துவமனை வளாகத்தையும் இதன் நிமித்தம் பயன்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனை கேட்டறிந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்காலத்தில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதாகக் கூறினார்.